எந்த வகையான காய்ச்சல் வந்தாலும் பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றார் அறந்தாங்கி நகராட்சி ஆணையர் பெ.வே. நவேந்திரன்.
அறந்தாங்கி நகராட்சி சார்பில்அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏடிஎஸ் கொசு ஒழிப்பு நாள் விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அவர் மேலும் பேசியது:
மாணவிகளும், பெற்றோரும் எதை பற்றியும் அச்சப்படத் தேவையில்லை. காரணம் டெங்கு காய்ச்சல் வராமல் காத்துக் கொள்வது எப்படி என்று இங்கு செயல் விளக்க நிகழ்ச்சி செய்து காண்பிக்கப்பட்டது.
நமது வீட்டிலும் சுற்றுப்புறத்திலும் நல்ல நீர் தேங்காமல் பார்த்துக் கொண்டாலே கொசு வளர்வது தடுக்கப்படும். காரணம் கழிவுநீரில் ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தியாவதில்லை. அதேபோல நமது வீட்டில் வெளிப்புறங்களில் கிடக்கும் டயர்கள், தேங்காய் ஓடுகள், திறந்த பானைகள் போன்றவற்றில் நல்ல நீர் தேங்கி, அதில் கொசுக்கள் முட்டையிட்டு இனத்தை பெருக்குகின்றன. ஆகவே கொசுக்கள் வளராமல் தடுத்தாலே நமக்கு காய்ச்சல் கவலை இல்லை.
இங்கே 5 நாட்களுக்கு அனைத்து மாணவிகளுக்கும் வழங்கப்படும் நில வேம்பு கசாயத்தை குடித்தாலே காய்ச்சல் வருவதில் இருந்து காத்துக் கொள்ளலாம். மேலும் எந்த வகை காய்ச்சல் வந்தாலும் அலட்சியமாக இருந்துவிடாமல் தாமதமாக மருத்துவமனைக்குச் செல்வதைக் காட்டிலும் ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகினால் நோய் தடுக்கப்படும். ஆகவே அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார் அவர்.
அறந்தாங்கி நகராட்சி நகர்நல மருத்துவர் கே. ருக்மணி ஏடிஎஸ் கொசுக்கள் குறித்து செயல்விளக்கம் மூலம் எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சி. கார்த்திகா, துப்புரவு ஆய்வாளர் எஸ். சேகர், ஆசிரியர்கள், நகராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.