சொத்துத் தகராறில் தந்தை வெட்டிக் கொலை: மகன் கைது
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே சொத்துத் தகராறில், தந்தையை வெட்டிக்கொலை செய்த இளைஞரை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
கறம்பக்குடி அருகேயுள்ள குளந்திரான்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தையா(65). இவரது மகன்கள் சித்திரைகுமார்(38), பசுபதி(35). இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு கந்தையா சொத்துகளைப் பிரித்துக் கொடுத்துள்ளார்.
இதில், கந்தையாவின் மூத்த மகன் சித்திரைகுமாருக்கு கூடுதல் நிலங்கள் வழங்கப்பட்டதாம். இதனால், கந்தையாவுக்கும், பசுபதிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் திங்கள்கிழமை இரவும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த பசுபதி, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கந்தையாவை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த கந்தையா தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து, கறம்பக்குடி போலீஸார் வழக்கு பதிந்து செவ்வாய்க்கிழமை பசுபதியைக் கைது செய்து விசாரனை மேற்கொண்டுள்ளனர்.