புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் அசோக் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழு ஆகியவை இணைந்து நடத்திய சுற்றுவட்ட இளையோர் நாடாளுமன்றம் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு நேரு யுவ கேந்திராவின் மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் சுந்தர மகாலிங்கம் தலைமை வகித்தார்.
நேரு யுவ கேந்திரா கணக்காளர் நமச்சிவாயம் நோக்கவுரை ஆற்றினார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலாஹிஜான் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் "ஆளுமை வளர்ச்சி" என்ற தலைப்பில் சதாசிவம், "யோகாவும் உடல்நலமும்'' என்ற தலைப்பில் பாப்புலெட்சுமி ஆகியோர் பேசினர். தொடர்ந்து மக்களாட்சித் தத்துவத்தின் மேன்மையை எடுத்துரைக்கும் வகையில், பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற ''மாதிரி சட்டப்பேரவை'' நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் கஜா புயல் பாதிப்பு மற்றும் நிவாரணப்பணிகள் குறித்த விவாதங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது.
விழாவில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ரத்தினசபாபதி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் தமிழ்ச்செல்வி, பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.