பொன்னமராவதி வலையப்பட்டியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் சுமார் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள நகைகளைத் திருடிச்சென்ற மர்மநபரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வலையப்பட்டி செந்தமிழ் கலாசாலை வீதியைச் சார்ந்தவர் ஜெயம் ஆச்சி (75). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் சென்னையில் தொழில் செய்து வருகின்றனர். ஜெயம் ஆச்சி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் வாசல் கதவைப் பூட்டிவிட்டு மின்விளக்கினை அணைத்தபோது மர்மநபர் ஒருவர் ஜெயம் ஆச்சியின் முகத்தை மூடி காதில் போட்டிருந்த வைரத் தோடு மற்றும் தங்க வளையல்களைப் பறித்துள்ளார். மேலும், அவரை மிரட்டி வீட்டினுள் இருந்த தங்கச் சங்கிலி, ரொக்கம் ரூ. 1500, செல்லிடப்பேசி ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.