புதுக்கோட்டை சிவபுரம் ஜெ.ஜெ. கல்லூரியில் மாணவர்களின் பணி செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துதல் தொடர்பான பயிலரங்கம் 20 நாட்கள் நடைபெறுகிறது. அதன் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் கல்லூரி முதல்வர் பரசுராமன் தலைமையில் நடைபெற்ற பயிலரங்கத்தில், ரெடிங்டன் நிறுவனத்தின் வட்டாரத் தலைவர்
இந்திரா கண்ணன் தொடங்கி வைத்துப் பேசியது: கல்லூரிப் பருவத்திலேயே மாணவர்கள் மனிதவள மேலாண்மை திறமைகளை வளர்த்துக் கொண்டால் வாழ்வில் முன்னேற்றலாம். குறிக்கோள், அயராத முயற்சி, கட்டுப்பாடு கொண்டிருந்தால் மாணவர்கள் உயர்ந்த இடத்துக்குச் செல்லலாம் என்றார்.
கல்லூரி முத்லவர் பரசுராம் பேசியது: இன்றைய சூழலில் மாணவர்கள் பாடங்களைக் கற்பது மட்டுமே போதாது. சக மனிதர்களுடன் பழகும் பாங்கு, குழு மனப்பான்மை, பிறர் திறமைகளை ஈர்த்து வெளிக்கொண்டு வரும் தன்மை, தன்னை நிர்வகிக்கும் பண்பு ஆகியவற்றை இன்றைய மாணவர்கள் கொண்டிருந்தால் அதுவே வெற்றிக்கான திறவுகோல். மாணவர்கள் இப்பயிற்சியை சரிவர பயன்படுத்தி முன்னேற்றமடைய வேண்டும் என்றார்.
விழாவில், குவைத் சோடக் சோ நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் மணிகண்டன், கணினி பயன்பாட்டியியல் துறைத் தலைவர் சதீஸ் ஆரோன் ஜோசப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.