கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்தல் நடைபெறாத காரணத்தால், ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சிகள் உள்ளிட்டவை அந்தந்த ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களை தனி அலுவலர்களாகக் கொண்டு ஊராட்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.
வட்டார ஊராட்சிகள், கிராம ஊராட்சிகள் என ஊராட்சிக்கு தலா 2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியில் இருப்பர். கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சிகள்) பணியிடம் காலியாக உள்ளது. ஒரு வட்டார வளர்ச்சி அலுவலர் மட்டுமே அனைத்து பணிகளையும் கவனித்து வந்தார்.
இந்நிலையில், அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் விடுப்பில் உள்ளார். இதனால் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியப் பணிகள் ஒருமாத காலமாக தேக்கத்தில் உள்ளன. மேலும், ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படுவதால் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் கந்தர்வகோட்டை ஒன்றியத் தலைவர் சியாமளா, மாவட்டச் செயலாளர் பால் பிரான்சிஸ், நலதேவன், காமராஜ், மனோகரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.