பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் அடைக்கலம் காத்தார் கோயில் வருடாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மேலத்தானியம் அடைக்கலம்காத்தார், கருப்பர், தொட்டிச்சி அம்மன், கொங்காணிசித்தன், சன்னாச்சி, பட்டாணி ஆகிய தெய்வங்களுக்கு குடமுழுக்கு விழா கடந்த 2-2-2017இல் நடைபெற்றது. விழாவில், திரளான பொதுமக்கள் பங்கேற்க, சிறப்பாகக் குடமுழுக்கு நடைபெற்றது.
அதனையடுத்து இக்கோயிலின் வருடாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில், சுவாமிநாத பண்டிதர் தலைமையில் கணபதி ஹோமம், மஹாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட யாக பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. விழாவில், சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாகப் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். விழாவையொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆதி. கருப்பையா பரம்பரை பூசாரி, அடைக்கலம் காத்தார் கோயில் பங்காளிகள் மற்றும் மேலத்தானியம் கிராமத்தார்கள் செய்திருந்தனர்.