போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்தால் விபத்துகளைத் தவிர்க்கலாம் என்றார் புதுகை மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் எம்.பாலசுப்பிரமணியன்.
பொன்னமராவதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாலை பாதுகாப்பு, விபத்து தடுப்பு குறித்த போக்குவரத்து விழிப்புணர்வுக் கூட்டத்தில் அவர் பங்கேற்று மேலும் பேசியது:
நம் நாட்டில் நடக்கும் பல்வேறு விபத்துகளில் மனித குலத்தை அச்சுறுத்தும் வகையில் உள்ளவை சாலை விபத்துகள். தேசிய நெடுஞ்சாலைகளில் பெரும்பாலான விபத்துகள் மனித தவறுகளினால் நேரிடுகிறது. அவைகளில் பெரும்பாலான விபத்துகள் இருசக்கர வாகன விபத்துகளாகும். வாகனம் ஓட்டும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். கார் ஓட்டும்போது சீட் பெல்ட் கட்டாயம்
அணிய வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் நேருக்கு நேர் விபத்துகள் அதிகம் ஏற்படாது. பெரும்பாலும் பின்புறம் வாகனங்கள் மோதி விபத்துகள் நேரிடுகிறது. ஓட்டுநர்கள் போதிய இடைவெளி விட்டு வாகனங்களை இயக்கிச் செல்ல வேண்டும். ஓய்வில்லாமல் வாகனம் ஒட்டக்கூடாது. தூக்கம் வந்தால் ஓய்வெடுத்து உறங்கிச் செல்ல வேண்டும். செல்லிடப்பேசி பேசியபடியே வாகனம் ஓட்டக்கூடாது. ஓட்டுநர்கள் வாகனத்தை இயக்கும் முன்பு பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். மேலும் அனைத்து ஓட்டுநர்களும் கண்டிப்பாக போக்குவரத்து விதிமுறைகளை அறிந்து ஓட்ட வேண்டும். அதேபோல், சரக்கு வாகனங்களில் ஆள் ஏற்றக்கூடாது. எனவே ஓட்டுநர்கள் முறையாக போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்தால் விபத்துகளைத் தவிர்க்கலாம் என்றார்.
கூட்டத்திற்கு,பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் பி.தமிழ்மாறன் முன்னிலை வகித்து சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து பேசினார். மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தாமரை, பனையபட்டி காவல் ஆய்வாளர் சாந்தகுமாரி மற்றும் சுற்றுலா கார், வேன் மற்றும் சரக்கு வாகனம், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொன்னமராவதி காவல் ஆய்வாளர் கருணாகரன் நன்றி கூறினார்.