தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயற்குழு கூட்டம் இலுப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வட்டாரத் தலைவர் ஆனந்த குமார் தலைமை வகித்தார். செயலாளர் முருகையா வரவேற்றார்.
இதில், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் களைய கோரி, சென்னையில் ஜனவரி 20-இல் நடைபெறும் உண்ணாவிரதத்தில் திரளான ஆசிரியர்கள் கலந்துகொள்வது, ஏ, பி- பிரிவு ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்காததற்கு கண்டனம் தெரிவிப்பது, பணப்பலனை உரிய நேரத்தில் வழங்க அன்னவாசல் உதவி மற்றும் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களை கோருதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், வட்டாரத்தில் உள்ள ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கண்ணன் நன்றி கூறினார். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் சரவணன் செய்திருந்தார்.