புதுக்கோட்டை-மதுரை இடையே 3 சுங்கச்சாவடிகளில் அதிகளவில் பணம் வசூலிப்பதை தடுக்கக் கோரி, திமுகவினர் ஆட்சியர் சு.கணேஷிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.
புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் திமுக நகரச்செயலர் நைனா முகமது தலைமையில் சாலை விபத்து தடுப்பு மீட்பு சங்கத்தலைவர் மாருதி க.மோகன்ராஜ் உள்ளிட்டோர் ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், "புதுக்கோட்டையிலிருந்து மதுரைக்கு செல்லும் வழித்தடத்தில் புதுகையில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நமுணசமுத்திரம் சுங்கச்சாவடியில் கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு ரூ.30 முதல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அங்கிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள திருப்பத்தூர் சுங்கச்சாவடியில் ரூ.60 முதல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. மேலும், மேலூர் சுங்கச்சாவடியில் ரூ.75 வசூல் செய்யப்படுகிறது.
இதனால், புதுகையில் இருந்து மதுரைக்கு காரில் சென்றுவர ரூ.330 செலுத்த வேண்டியுள்ளது. இது காரில் மிகுந்த சிரமத்தை அளிக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் சுங்கச்சாவடியில் அதிகளவு பணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.