அன்னவாசல் அருகேயுள்ள தாண்றீஸ்வரம் சத்ருசம்கார மூர்த்தி கோவில் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (மார்ச் 13) நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், ஆட்சியர் சு. கணேஷ் ஆகியோர் ஞாயிற்றுகிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வாடிவாசலில் இருந்து காளைகள் வெளியேறும் பகுதியின் இரு புறங்களில் தடுப்புக் கட்டைகள் அமைக்கும் பணி, முக்கியப் பிரமுகர்கள் அமருமிடம், காளைகள் பரிசோதனை செய்யும்
இடம் உள்பட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடப்பதை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர்.வருவாய் கோட்டாட்சியர் ஆர். ஜெயபாரதி, காவல் துணைக் கண்காணிப்பாளர் பி. கோபாலசந்திரன், வட்டாட்சியர் சோனை கருப்பையா, அரசு அலுவலர்கள், விழா குழுவினர் உடனிருந்தனர்.