புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகள் நவ.23ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆடவர், மகளிருக்கு நவ.23ஆம் தேதி மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற உள்ள போட்டியில் கை, கால் ஊனமுற்றோருக்கு செட்டில் பாட்மின்டன் ஒற்றையர், இரட்டையர் (ஒவ்வொரு குழுவிலும் 5 விளையாட்டு வீரர்கள்), டேபிள் டென்னிஸ் (ஒவ்வொரு குழுவிலும் இரண்டு விளையாட்டு வீரர்கள்), மனநலம் பாதிக்கப்பட்டவர் எறிபந்து (ஒவ்வொரு குழுவிலும் 7 விளையாட்டு வீரர்கள்), காது கேளாதோர் கபடி போட்டி நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்கான தகுதிகள், வயதுவரம்பு கிடையாது.
போட்டிகளில் கலந்துகொள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் மருத்துவச் சான்று, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் சான்று உள்ளிட்டவைகளில் ஏதாவது ஒன்றை தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும். போட்டிகள் நடைபெறும் நாளில் காலை 9 மணிக்கு விளையாட்டரங்கிற்கு வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.