அறந்தாங்கியில் மின் விநியோகத்தை சீரமைக்கக்கோரி நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த வேண்டியும் அண்ணா சிலை அருகே வர்த்தகர்கள் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடத்தினர்.
அறந்தாங்கி நகரில் கடந்த 4 நாட்களாக மின்விநியோகம் முழுமை பெறாத காரணத்தால் குடிநீர் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வர்த்தகர்கள் தங்கள் கடைகளில் மின்சாரம் முழுமையாக வராத காரணத்தால் ஜெனரேட்டர் மூலம் தினமும் ரூ. ஆயிரத்திற்கு மேல் டீசல் செலவு செய்து வியாபாரம் நடத்த வேண்டியுள்ளது.
ஆகவே வர்த்தக சங்கத் தலைவர் பா.வரதராஜன் தலைமையில் பொருளாளர் சலீம் உள்ளிட்ட வர்த்தகர் சங்க நிர்வாகிகள் கோட்டை காரைக்குடி சாலையில் உள்ள சோதனைச் சாவடி அருகில் இருந்து பேரணியாக வந்து அண்ணா சிலையைச் சுற்றி அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் க. பஞ்சவர்ணம், வட்டாட்சியர் க.கருப்பையா, காவல் துணை கண்காணிப்பாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி புதன்கிழமைக்குள் நகரில் மின்விநியோகம் சரிசெய்யப்பட்டுவிடும் என உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டத்தில் திமுக முன்னாள் நகர செயலாளர் க.இராஜேந்திரன், பாஜக முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் லெ.முரளிதரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.