அன்னவாசல் அருகே புதன்கிழமை அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்றவரை மாவட்ட கலால் துறையினர் கண்டறிந்து 93 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
புதுகை மாவட்டம், குளத்தூர் வட்டம் அன்னவாசல் அருகேயுள்ள காவேரிநகர் கிராமத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதாக, மாவட்ட கலால் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து புதுகை உதவி ஆணையர்(கலால்) கார்த்திகேயன் தலைமையில், கோட்ட கலால் அலுவலர் எஸ். பி. மனோகரன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் அப்பகுதிகளில் திடீர் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது மேலமுத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகன் சக்திவேல் மதுபாட்டில்களைப் பெட்டிக்கடையில் பதுக்கி விற்றுவந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரிடம் இருந்த 93 மதுபாட்டில்களைக் கைப்பற்றினர். தொடர்ந்து மாவட்ட மதுவிலக்கு காவல்துறையினரிடம் அவரை ஒப்படைத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது.
அரியலூரில்: அரியலூர் அடுத்த கயர்லாபாத் அருகே மது விற்ற 2 பேர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.
கயர்லாபாத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வகுமார் தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு அப்பகுதியில் ரோந்து சென்றபோது அஸ்தினாபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் (39) என்பவர் அப்பகுதி மாரியம்மன் கோயில் பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்தனர். இதேபோல மதுபானம் பாட்டில்களை பதுக்கி விற்ற காட்டுபிரியங்கியம், பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்த தங்கவேலையும் (64) போலீஸார் கைது செய்தனர்.