அறந்தாங்கி நகரில் தற்போது நிலவும் பருவநிலை மாறுதல் காரணமாக டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
நகராட்சி ஆணையர் பொறுப்பு நை. மீரா அலி உத்தரவின்பேரில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சி. சேகர் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் தேவேந்திரன், ஆசைத்தம்பி, ஆத்மநாதன் உள்ளிட்டோர் நகரின் 27 வார்டுகளிலும் நேரடியாகச் சென்று கழிவுநீர் செல்லும் கால்வாய்கள், கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை ஆய்வு செய்து நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் உடனுக்குடன் நீர் தேங்காமல் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
மேலும் நகரில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் கடந்த வாரமே நிலவேம்பு குடிநீர் நகராட்சி மூலம் வழங்கப்பட்டது. மேலும் 11 குழுக்கள் அமைத்து வீடுவீடாக தண்ணீர் தொட்டிகள், மாடியில் தண்ணீர் தேங்கிய இடங்கள் உள்ளிட்டவற்றை நேரடியாக ஆய்வு செய்து, கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் மருந்து அடிக்கப்பட்டது. இந்த பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க நகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.