அறந்தாங்கியில் ரூ.1.25 லட்சம் ரொக்கம், 8 பவுன் தங்க நகைகள் திருட்டு
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் இருவரது வீட்டின் பூட்டை உடைத்து, ரூ.1.25 லட்சம் ரொக்கம், 8 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
அறந்தாங்கி அப்துல்ஹமீது தெருவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர்கள் ஹக்கீம், அப்துல் ஜப்பார்.
இவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுவிட்டனர்.
இதை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத திருடர்கள், இருவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த ரூ.1.25 லட்சம் ரொக்கம், 8 பவுன் நகைகளைத் திருடிச் சென்றனர். தங்கள் வீடுகளில் நகைகள் மற்றும் ரொக்கம் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்த இருவரும் அறந்தாங்கி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
அறந்தாங்கி காவல் துணைக் கண்காணிப்பாளர் கோகிலா, ஆய்வாளர் ரவீந்திரன் மற்றும் போலீஸார் திருட்டு நடைபெற்ற பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பீரோவிலிருந்த பொருள்கள், துணி வகைகள் சிதறிக் கிடந்தன.
பல நாள்களாக இருவரது வீட்டை நோட்டமிட்ட நபர்களே, ஹக்கீம் மற்றும் அப்துல்ஹமீது இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி நகைகள் மற்றும் ரொக்கத்தைத் திருடிச் சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.