புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பதுக்கிவைக்கப்பட்டிருந்த 2900 மதுபாட்டில்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
ஆலங்குடி அருகேயுள்ள கல்லுப்பள்ளம் பகுதியில் மதுபானங்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கிடைத்த தகவலைத்தொடர்ந்து, சீனிவாசன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கல்லுப்பள்ளம் டாஸ்மாக் மதுக்கடை அருகே 2900 மதுபாட்டில்கள் பதுக்கிவைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. தகவலறிந்து சென்ற தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ராதாஜெயலெட்சுமி, விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆலங்குடி மதுவிலக்கு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.