புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இலவசமாக கட்டப்பட்ட இரண்டு வீடுகள் செவ்வாய்க்கிழமை பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
சென்னையைச் சேர்ந்த எய்டு இந்தியா நிறுவனம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 வீடுகள் கட்டித் தரப்படவுள்ளன.
இதில் முதல் கட்டமாக 10 வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் அண்மையில் தொடங்கின.
இவற்றில், புதுக்கோட்டை ஒன்றியம், உப்புப்பட்டியைச் சேர்ந்த அய்யாக்கண்ணு மனைவி கல்யாணிக்கான வீடும், திருவரங்குளம் செல்வராசு மனைவி பாண்டிச்செல்விக்கான வீடும் கட்டுமானப் பணிகள் முடிந்து செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.
இந்த வீடுகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எழுத்தாளர் நா. முத்துநிலவன் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் எய்டு இந்தியா நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி. ராஜா, நிர்வாகிகள் சுவாமிநாதன், சுப்பிரமணியன், வனச்சரக அலுவலர் தாமோதரன், கவிஞர் கவிவர்மன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலர் டி. சலோமி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.