புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் ரூ. 21.25 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் அ. ராமசாமி வழங்கினார்.
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் 3 பேருக்கு தலா ரூ. 75 ஆயிரம் மதிப்பில் கடனுதவிகள், 5 மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகள், 4 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 4.10 லட்சத்தில் விபத்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் 6 பேருக்கு தலா ரூ. 20 ஆ யிரம் மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்கள், நகர நிலவரித் திட்டத்தில் கீழ் 10 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.
மகளிர் திட்டத் துறை சார்பில் நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 31 மகளிர் குழுக்களுக்கு ரூ. 3.10 லட்சம் மதிப்பிலான சுழல் நிதிகளும், சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 5 குழுக்களுக்கு தலா ரூ. 10,800 கடனுதவிகளும், 5 மகளிருக்கு தனிநபர் கடனாக ரூ. 2.30 லட்சமும் வழங்கப்பட்டது.
அப்போது, மகளிர் திட்ட அலுவலர் சரோஜாதேவி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சகுந்தலா,
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) வடிவேல்பிரபு, மகளிர் திட்ட உதவித் திட்ட அலுவல் சீனிவாசன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
580 மனுக்கள் அளிப்பு:
கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 580 மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து அதுகுறித்த விவரங்களை மனுதாரர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என அனைத்துத் துறை அலுவலர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் அ. ராமசாமி அறிவுறுத்தினார்.