புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் பல ஆண்டுகளாக சிதலமடைந்து காணப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் தற்போது இடிக்கப்பட்டு வருகிறது.
இருதளங்களுடன் செயல்பட்டு வந்த இந்த கட்டடம் பல ஆண்டுகளுக்கு முன்பு மோசமான நிலையில் காணப்பட்டது. இக்கட்டடத்தின் சிமென்ட்பூச்சுகள் பெயர்ந்து இருந்ததால் அதிகாரிகள் முதல் பொதுமக்கள் வரை அனைத்துத் தரப்பினரும் அச்சத்துடனேயே இருந்து வந்தனர். இதுகுறித்து மனுக்கள் மூலமாக கிராம மக்கள் தெரிவித்து வந்த நிலையில், ஆட்சியரிடமும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தன.
இந்த நிலையில், மிக பழைமையாகி சிதலமடைந்து காணப்பட்ட ஒன்றியக் குழுக் கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஒன்றிய அலுவலகக் கட்டடம் தற்காலிகமாக கால்நடை மருத்துவமனை பின்புறத்திலுள்ள சேவை மையத்தில் செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.