ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் முந்திரி சாகுபடி குறித்த கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேளாண் இணை இயக்குநர் சுப்பையா தலைமை வகித்தார். வேளாண் நிலைய தோட்டக்கலைத் துறை உதவி பேராசிரியர் தனலெட்சுமி பேசியது:
தமிழகத்தில் முந்திரி பயிர் அரியலூர், கடலூர் மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. முந்திரி ஒரு பல்லாண்டு கால பருவப் பயிராகும். சிறந்த முறையில் பராமரிக்க சொட்டு நீர் பாசனம் அரசு மானியத்துடன் செயல்படுத்தப்படுகிறது. பூச்சி மற்றும் நோய்களைத் தவிர்க்க முன்னேற்பாடு மிக முக்கியம். தேர்வு செய்யப்பட்ட ஒட்டு ரகங்களை நடுவதன் மூலம் சிறந்த பண்புகளை தாய் மரத்திலிருந்து பெற முடியும். எனவே சிறந்த ரகங்களை நட வேண்டும்.
மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு ஹெக்டரில் இருந்து பெறப்படும் மகசூல் 314 கிலோ ஆகும். நமது மாவட்ட முந்திரி தோட்டங்கள் பெரும்பாலும் விதை மூலம் உற்பத்தி செய்த கன்றுகளால் நடப்பட்டவை. வளம் குறைந்த காடுகளிலும், அதிகப் பரப்பில் தோப்புகளிருப்பதும், சரியான இடைவெளியில் நடாமல் மிகக் குறைந்த எண்ணிக்கையில் மரங்களைப் பராமரிப்பதும், சரியாக உரமிடாது, மண் வளத்தைப் பாதுகாக்கத் தேவையான தொழில் நுட்பங்களை அறியாதிருப்பதும், சரியான பயிர் பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ளாதிருப்பதும் முந்திரி மகசூல் குறைய முக்கியக் காரணங்களாகும். ஆகவே, முந்திரியில் மகசூலை அதிகரிக்க உயர் ரக முந்திரி ஒட்டுச் செடிகளை நடவு செய்து புதிய தொழில் நுட்பங்களை கடைப்பிடிப்பது மிக அவசியம் என்றார்.
வேளாண் விரிவாக்க பயிற்சி உதவியாளர் சிவபாலன், மனையியல் துறை பயிற்சி உதவியாளர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் லதா வரவேற்றார். இதில் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.