மாணவர்கள் தனித்திறன்களை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்றார் அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் கு.திராவிடச்செல்வம்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் கலையருவி எனும் கல்வித்திருவிழா அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு, அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் தலைமை வகித்து போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி மேலும் பேசியது: கல்வித் திருவிழாவில் நடைபெற்ற போட்டிகளில் 94 பள்ளிகளைச் சேர்ந்த 574 மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிக்காட்டியுள்ளார்கள்.
மாணாக்கர்கள் ஒவ்வொருவரும் தங்களது திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். நாகுடி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.முருகேசன், பெரியாளூர் கிழக்கு தலைமை ஆசிரியர் இராஜேந்திரன், கீழையூர் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.மணிமுத்து உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கவிதை, ஓவியம், நடனம், தேசபக்தி பாடல்கள், நாடகம், பேச்சுப் போட்டி, வில்லுப்பாட்டு போன்ற பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகளாக போட்டிகள் நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கு. தாமரைச்செல்வன் வரவேற்றார். பள்ளி துணை ஆய்வாளர் எஸ்.செல்வம் நன்றி கூறினார்.