எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, ஜகதாபட்டினம் மீனவர்கள் 5 பேரைத் தாக்கியும், மீன்பிடி படகை சேதப்படுத்தியும் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.
புதுகை மாவட்டம், ஜகதாபட்டினம் மீன்பிடித் தளத்தில் இருந்து சனிக்கிழமை காலை 250 விசைப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இதில் ஜகதாபட்டினத்தைச் சேர்ந்த அனுமந்தநாட்டார் மகன் கலைவாணன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற அதே ஊரைச் சேர்ந்த கலைவாணன் மகன் கார்த்திக்(25), நந்தகோபால் மகன் குட்டியாண்டி (25), சூரியன் மகன் ராசு(65), மாரியப்பன் மகன் மனோகர் (எ) வழிவிட்டான், வடிவேலு மகன் ஆனந்த் (48) உள்ளிட்டோர் சர்வதேச எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் மீனவர்களைத் தாக்கியும், விசைப்படகின் முன்பகுதியை சேதப்படுத்தியும் சென்றதாகவும் தெரிகிறது. இதையடுத்து, அதே படகில் ஜகதாபட்டினம் வந்தடைந்த மீனவர்களுக்கு மணமேல்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், லேசான காயமடைந்த குட்டியாண்டி என்ற மீனவரைத் தவிர மேற்குறிப்பிட்ட 4 மீனவர்களும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச் சம்பவத்திற்கு மீனவர்கள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.