புதுக்கோட் டை மாவட்டம், பொன்னமராவதி அருகே மேலத்தானியம் கிராமத்தில் உள்ள ஆதினமிளகி அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனிமாதம் புரவி எடுப்பு திருவிழா நடைபெறும். நிகழாண்டு புரவி எடுப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் ஆவாம்பட்டியில் வைத்து மண் கொண்டு புரவிகள், மதலைகள், சிலைகள் வடிவமைக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட சிலைகளை சுமந்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.
முக்கிய வீதிகளின் வழியே மேள தாளத்துடன் சென்று மேலத்தானியம் ஆதினமிளகி அய்யனார் கோயிலில் வைத்து வழிபட்டனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை மேலத்தானியம், ஆவாம்பட்டி உள்ளிட்ட 8 கிராம மக்கள் செய்திருந்தனர். விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காரையூர் காவல்துறையினர் செய்திருந்தனர்.