புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கும்மங்குளத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஒரு தரப்பைச் சேர்ந்த 5 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து வியாழக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.
ஆலங்குடி அருகேயுள்ள கும்மங்குளம் அம்பேத்கர் நகரில் உள்ள முருகன் கோயில் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் கொட்டகை அமைக்கப்பட்டது தொடர்பாக இருசமூகத்தினருக்கு இடையே செவ்வாய்க்கிழமை இரவு பிரச்னை ஏற்பட்டு பின்னர் மோதலாக மாறியது. இதில், ஒரு தரப்பைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஆலங்குடி போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஒரு தரப்பினர் ஆலங்குடியில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, அவர்களிடம் வட்டாட்சியர், போலீஸார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில், மற்றொரு தரப்பைச் சேர்ந்த சேவியர், முத்துக்கண்ணு, அருளாந்து, சந்தானம், செல்வம் உள்ளிட்டோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆலங்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் கும்மங்குளம் பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சென்ற ஆலங்குடி காவல் துணைக்கண்காணிப்பாளர் மோகன்தாஸ் தலைமையிலான போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலில் ஈடுபட்டோரை கலைந்து போகச் செய்தனர்.
இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.