தென் இந்திய அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற தடகளப் போட்டிகளில் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற புதுக்கோட்டை மாணவருக்கு அக்கல்லூரி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.
தென் இந்திய அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் அண்மையில் கொங்கு கல்லூரியில் நடைபெற்றன. இப்போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து 200 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்ற புதுக்கோட்டை செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரி இயந்திரவியல் மாணவர் எஸ். காளிதாஸ் தங்கம் வென்றார். இவரை கல்லூரியின் தலைவர் ஏவிஎம். செல்வராஜ், நிர்வாக இயக்குநர் இரா. வைரவன், செயலர் தே. தியாகராஜன், தாளாளர் ஏவிஎம். ராமையா, முதன்மை நிர்வாக அலுவலர் ஏவிஎம்எஸ் கார்த்திக், முதல்வர் எஸ்.ஜி. செல்வராஜ் ஆகியோர் பாராட்டினர்.