அறந்தாங்கி நகராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு குப்பைகளைத் தரம் பிரிக்கும் பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.
அறந்தாங்கி நகராட்சி ஆணையர் ஆர். வினோத் தலைமையில் நடைபெற்ற பயிற்சிக்கு துப்புரவு ஆய்வாளர் எஸ். சேகர் முன்னிலை வகித்தார். துப்புரவு மேற்பார்வையாளர்கள், அனைத்து துப்புரவுப் பணியாளர்கள் பங்கேற்றனர்.
பயிற்சி முகாமில் மக்கும், மக்காத குப்பைகளை எவ்வாறு தரம் பிரிப்பது என்பது குறித்து விளக்கிய நகராட்சி ஆணையர் ஆர். வினோத் மேலும் கூறியது:
திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் வீடு வீடாக வாங்கி வரும் குப்பைகளில் மக்கும் குப்பைகளிலிருந்து மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு விற்கப்படுகிறது.
கடந்த வாரம் 3,270 கிலோ மண்புழு உரம் ராஜேந்திரபுரம் தென்னை உற்பத்தி நிறுவனத்துக்கு விற்கப்பட்டு ரூ. 10,060 நகராட்சி கரூவூலத்தில் வரவு வைக்கப்பட்டது.
அதேபோல மக்காத குப்பைகளில் இருந்து எடுக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு அரியலூர் சிமென்ட் ஆலைக்கு அனுப்பப்படுகிறது. ஆகவே துப்புரவுப் பணியாளர்கள் வீடு வீடாகச் குப்பைகளைச் சேகரிக்கும்போதே தரம் பிரித்து வாங்கி விட்டால் வேலை சுலபமாகும். மேலும் குப்பைகளை தரம் பிரிக்கும்போது கையுறை அணிந்து பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் என்றார் அவர்.