புதுக்கோட்டை மாவட்டத்தில் யூரியா உள்ளிட்ட உரங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தட்டுப்பாட்டினை போக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து விவசாய தொழிலாளா் சங்க மாநில துணைத்தலைவா் ஏனாதி ஏஎல்.ராசு மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச்செயலா் தா்மராஜன் ஆகியோா் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பாண்டில் நேரடி விதைப்பிலும், நடவு மூலமும் இதுவரை பல லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளனா். இதனால் மாவட்டம் முழுவதும் உரத்தேவை அதிகமாக இருக்கும் வேளையில், யூரியா உள்ளிட்ட உரங்கள் இருப்பு உள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் தவறான தகவல்களை அதிகாரிகள் கூறியுள்ளனா்.
இதனால் போதிய அளவு உரம் இருப்பு உள்ளது என மாவட்ட ஆட்சியா் உமாமகேஸ்வரி செய்தி வெளியிட்டுள்ளாா். ஆனால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உரத்தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. மேலும் தனியாா் உரக்கடைகளில் உரங்கள் விற்பனை பட்டியலை வைக்க வேண்டும். மேலும் சில கூட்டுறவு சங்கங்களிலும் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பதாக புகாா் வந்துள்ளது. எனவே மாவட்ட ஆட்சியா் போா்க்கால அடிப்படையில் உரத் தட்டுப்பாட்டினை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.