பொன்னமராவதியில் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட சிலம்பக்கழகம் மற்றும் அடைக்கலம்காத்தார் சிலம்பப்பாசறை இணைந்து, பொன்.புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டியை நடத்தினர். மருத்துவர்கள் ஆ.அழகேசன், எஸ்.மதியழகன் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர்.
போட்டியில் 15-17 வயதிற்குள்பட்ட ஜூனியர் பிரிவு, 26-30 வயதிற்குள்பட்ட சூப்பர் சீனியர் பிரிவு உள்ளிட்ட போட்டிகளில் 125 பேர் பங்கேற்றனர். இதில் புதுக்கோட்டை ராஜசிம்மன் சிலம்பப்பாசறை முதலிடமும், புதுக்கோட்டை மாமல்லன் சிலம்பப்பாசறை இரண்டாம் இடமும் பிடித்து வெற்றிக்கோப்பை பெற்றன.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மாலையில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட சிலம்பாட்டக்கழக தலைவர் ஆர்.சுப்பையா தலைமை வகித்து, வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிகழ்களை வழங்கினார்.