பொன்னமராவதி அருகே ஞாயிற்றுக்கிழமை குடிசை வீட்டில் தீப்பிடித்து முற்றிலும் எரிந்து சாம்பலானது.
பொன்னமராவதி வட்டம், அரசமலை கணேசபுரத்தை சார்ந்தவர் சு.பாண்டியன். இவர் கோயில் சிற்ப வேலை செய்து வருகிறார்.
பாண்டியனின் வீட்டில் சமையல் எரிவாயு தீர்ந்து போன நிலையில், அவரது மனைவி வெள்ளையம்மாள், விறகு அடுப்பில் சமைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தீப்பொறிகள் குடிசையில் பட்டு தீப்பற்றியது.
உடனடியாக அருகில் உள்ளவர்கள் இணைந்து ஊருணியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து தீயை கட்டுப்படுத்த முயன்றனர். எனினும் குடிசை முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதில் வீட்டிலிருந்த கிரைண்டர், பாத்திரங்கள், துணிகள் மற்றும் சிற்பவேலைக்கான கருவிகள் எரிந்து சேதமடைந்தன. மேலும் வீட்டின் அருகே இருந்த 5 தென்னை மரங்கள் தீ விபத்தில் கருகி சேதமடைந்தது.