மழை வேண்டி புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூர் நாடியம்மன், கொத்தமங்கலம் பிடாரி அம்மன் கோயில்களில் புதன்கிழமை பாளையெடுப்பு திருவிழா நடைபெற்றது.
கீழாத்தூர் நாடியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, கீழாத்தூர், சிக்கப்பட்டி, காட்டுப்பட்டி, மேலாத்தூர், சூரன்விடுதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் அலங்கரிக்கப்பட்ட குடங்களில் தென்னம்பாளைகளை சுமந்தவாறு வானவேடிக்கை, மேலதாளங்கள் முழங்க ஊர்வலமாகச் சென்று கோயிலை அடைந்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இதேபோல கொத்தமங்கலம், பிடாரி அம்மன் கோயில் நடைபெற்ற பாளையெடுப்பு திருவிழாவில், கொத்தமங்கலத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள் குடங்களில் தென்னம்பாளைகளை சுமந்தவாறு, மழைவேண்டி கும்மிப்பாடல் பாடியவாறு ஊர்வலமாகச்சென்று கோயிலை அடைந்தனர். தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பிடாரி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில் திரளானோர் கலந்துகொண்டனர்.