அறந்தாங்கியில் ரத்ததான விழிப்புணர்வுப்பேரணி மற்றும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தி போர்ட் சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, அதன் தலைவர் டாக்டர் விஜய்சிவானந்தம் தலைமை வகித்தார், அரசு தலைமை மருத்துவர் பி.ரவி, ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் அ. ஆறுமுகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
அறந்தாங்கி அரசு மருத்துவமனை ரத்தவங்கி தலைமை மருத்துவர் ஜி.ராதாகிருஷ்ணன், அறந்தாங்கி காவல் ஆய்வாளர் ரவீந்திரன் உள்ளிட்டோர் பேரணியைத் தொடக்கி வைத்தனர். கேம்பிரிட்ஜ் கேட்டரிங் கல்லூரி, எம்.எஸ்.பாலிடெக்னிக் கல்லூரி, வளர்மதி, ராஜா பாராமெடிக்கல் கல்லூரிகளைச் சேர்ந்த சேர்ந்த மாணவ, மாணவிகள் பேரணியில் பங்கேற்று, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.
ரத்த தான முகாமில் அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு 50 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது. திட்டத் தலைவர் கே.பழனிவேல், முன்னாள் தலைவர்கள் கான்அப்துல்கபார்கான், கவிகார்த்திக், டாக்டர் செல்ல. செந்தமிழ்செல்வன் உள்ளிட்டோர் ரத்ததானம் குறித்து விளக்கவுரையாற்றினார்கள்.முன்னதாக ரோட்டரி கிளப் செயலர் அ.அப்துல்பாரி வரவேற்றார். நிறைவில் பொருளாளர் ஜி.கருப்பையா நன்றி கூறினார்.