அறந்தாங்கி நகராட்சி சார்பில் ஒப்புகைச் சீட்டுடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த நேரடி செயல்விளக்கம் செவ்வாய்க்கிழமை செய்து காண்பிக்கப்பட்டது.
அறந்தாங்கி நகராட்சி மேலாளர் ரெ. முத்துக்குமார் தலைமையில் நகராட்சி அலுவலர்கள், வாரச்சந்தையை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் கூடும் பேராவூரணி சாலையில் ஒப்புகைச் சீட்டுடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரத்தை பொதுமக்கள் பார்வைக்கு வைத்து செயல்விளக்கம் அளித்தனர்.
ஏராளமான வாக்காளர்கள் ஒப்புகைச்சீட்டுடன் கூடிய புதிய வாக்குப்பதிவு இயந்திரத்தில் தங்கள் வாக்கை செலுத்திவிட்டு அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் தாங்கள் தேர்வு செய்து வாக்களித்த சின்னம் சரியாக தெரிவதாக திருப்தி தெரிவித்தனர்.
இதேபோல், அனைத்து வார்டுகளிலும் சுழற்சி முறையில் ஒப்புகைச் சீட்டுடன் கூடிய வாக்களிக்கும் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை (தனி) சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கந்தர்வகோட்டை தாலுக்காவில் உள்ள 87வாக்குப்பதிவு மையங்களில் ஒப்புகைச்சீட்டுடன் கூடிய மின்னணு வாக்குப்பதிவு குறித்த செயல்விளக்கம் திங்கள்கிழமை செய்து காண்பிக்கப்பட்டது. வட்ட தேர்தல் அதிகாரி செல்வகணபதி, வருவாய் ஆய்வாளர்கள் செந்தில்குமார், உத்திராபதி மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு செயல் விளக்கம் பெற்றனர்.