கஜா புயல் நிவாரணத்தை உடனடியாக வழங்கக் கோரி புள்ளாண்விடுதி கிராம மக்கள் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர்.
ஆலங்குடி அருகிலுள்ள புள்ளாண்விடுதி ஊராட்சியைச் சேர்ந்த மக்கள் கஜா புயலில் வீடுகள், மரங்களை இழந்து பெரும் பாதிப்பைச் சந்தித்தனர். இக்கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட நிவாரணப் பொருள்கள், நிவாரணத் தொகை இதுவரை வழங்கப்படவில்லையாம்.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், நிவாரணத்தை உடனே வழங்க வலியுறுத்தி புள்ளாண்விடுதி ஊராட்சி அலுவலகம் முன்பு புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அங்கு சென்ற வடகாடு காவல் ஆய்வாளர் பாலாஜி,ஆலங்குடி வருவாய் ஆய்வாளர் சாந்தி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.