புத்தாண்டையொட்டி புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசலில் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர். இங்குள்ள படகுகுழாமில் ஏராளமானோர் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
அன்னவாசல் அருகிலுள்ள சித்தன்னவாசல் சுற்றுலாத்தலத்துக்கு புத்தாண்டையொட்டி செவ்வாய்க்கிழமை காலை முதலே ஏராளமானோர் வரத் தொடங்கினர். கல்லூரி மாணவ, மாணவிகள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் குடும்பத்துடன் குவிந்தனர்.
சித்தன்னவாசல் சுற்றுலாத்தலத்தைப் பார்வையிட வந்தவர்கள் அங்குள்ள குகை ஓவியம், சமணர் படுக்கையான ஏழடி பட்டம், போன்றவற்றை கண்டுகளித்தனர். மேலும் சிறுவர் பூங்கா, விளையாட்டு சறுக்குப் பகுதிகள்,, மண் யானைகள் போன்றவற்றில் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர்.
மேலும் சித்தன்னவாசலில் அமைக்கப்பட்டுள்ள படகு குழாமில் சுற்றுலாப் பயணிகள் மலையின் அழகை ரசித்தவாறு படகு சவாரி செய்தனர். மலைகளுக்கிடையே 10 அடி ஆழத்தில் நாவல்சுனை உள்ளது. இதன் அடியில் குடவறையில் சிவலிங்கம் உள்ளது. நீர்வற்றினால்தான் சிவலிங்கத்தை காண முடியும் என்றாலும், சுனைப் பகுதியை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அப்பகுதிக்குச் சென்று வந்தனர்.
பள்ளி விடுமுறை என்பதால் புதுக்கோட்டை, விராலிமலை, மணப்பாறை, திருச்சியிலிருந்து வந்த பேருந்துகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அன்னவாசல் காவல் ஆய்வாளர் சுமதி தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.