முன்னாள் பிரதமர் நேருவின் கூற்றுப்படி தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை தொடர வேண்டும் என்பதே திராவிடர் கழகத்தின் கருத்தாகும் என்றார் கி. வீரமணி.
அறந்தாங்கியில் அண்மையில் காலமான பெரியார் தொண்டர் கு. கண்ணுச்சாமியின் படத்தை வெள்ளிக்கிழமை திறந்து வைத்த அவர் மேலும் கூறியது: சமஸ்கிருதம், இந்தி மொழிகளைத் திணிப்பதே மோடி அரசின் கொள்கையாக உள்ளது. எந்த மொழியையும் கட்டாயமாக திணிப்பதையே எதிர்க்கிறோம், இந்தி கற்பதை எதிர்க்கவில்லை.
கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு பிரதமர் நேரில் வராதது மட்டுமல்ல ஆறுதல் வார்த்தை கூட கூறவில்லை. மத்திய அரசு வழங்கியுள்ள நிவாரணத் தொகை யானைப் பசிக்கு சோளப் பொறி போன்றது.
அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பாஜகவை வெறுத்து ஒதுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே மீண்டும் பாஜக அரசு அமையாது. அறந்தாங்கியில் பெரியார் அறக்கட்டளை சார்பில் சிறிய அளவில் நடைபெற்று வந்த பெரியார் படிப்பகம் கண்ணுச்சாமி நினைவுப் படிப்பகமாக விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றார். கட்சியினர் உடனிருந்தனர்.