பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டியில் மாட்டுப்பொங்கலையொட்டி 108 பசுக்களுக்கு கோபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
விவசாயம் செழிக்கவும், அனைத்து மக்களும் நோயற்ற வாழ்வுடன் மற்றும் குறைவற்ற செல்வத்துடன் வாழவும் வேண்டி கொன்னைப்பட்டி பிடாரி அம்மன் கோயில் திடலில் ஊர்ப் பொதுமக்கள், விழாக் குழுவினர் சார்பில் நடைபெற்ற பூஜையில் 108 பசுக்கள் வைத்து சிறப்பு பூஜை, மஹாலெட்சுமி பூஜை நடைபெற்றது. சிவாச்சாரியார் சரவண குருக்கள் பூஜையை வழிநடத்தினர்.
அதுபோல பொன்னமராவதி வட்டாரத்திற்குள்பட்ட அனைத்துக் கிராமங்களிலும் மாட்டுப் பொங்கலையொட்டி வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகள் அலங்கரிக்கப்பட்டு கொம்புகளில் வண்ணம் பூசப்பட்டது. கோயில்களில் பொதுமக்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.