புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள குடிமராமத்துப் பணிகள் தரமாகவும், முறையாகவும் நடைபெறுவதை அரசுத் துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார் குடிமராமத்துப் பணிகள் சிறப்புப் பணி அலுவலர் எம். பாலாஜி.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளுடன் தனித்தனியே நடத்திய ஆலோசனைக் கூட்டங்களில் அவர் பேசியது:
தமிழகத்தில் எதிர்கால வறட்சியைத் தவிர்க்க, மழைநீரை சேகரிக்கும் வகையில் நீர் ஆதாரங்களான ஏரி, குளங்களை தூர்வாரி பராமரிக்கவும், புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கவும் தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2017-18ஆம் ஆண்டில் தெற்கு வெள்ளாறு வடிநிலக் கோட்டத்தில் கண்மாய்களைத் தூர்வாரும் 113 பணிகள் ரூ. 3.37 கோடியில் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து 2018-19ஆம் ஆண்டில் 20 பணிகள் ரூ. 7.62 கோடியில் எடுத்துக் கொள்ளப்பட்டு இவற்றில் 18 பணிகள் முடிவடைந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக 2019-20ஆம் ஆண்டில் 59 பணிகள் ரூ. 17.91 கோடியில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன், கல்லணைக் கால்வாய் கோட்டத்தில் 7 பணிகள் ரூ. 2.36 கோடியில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 66 குடிமராமத்துப் பணிகள் ரூ. 20.27 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ளன.
இப்பணிகள் தரமாகவும், முறையாகவும் நடைபெறுவதை அரசுத் துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றார் பாலாஜி.
தொடர்ந்து மேலாத்தூர் குடிதாங்கி குளத்திலும், மேற்பனைக்காடு பெரிய ஏரியிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்துப் பணிகளை பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, தெற்கு வெள்ளாறு வடிநிலக் கோட்டச் செயற்பொறியாளர் சரவணன், கல்லணைக் கால்வாய் கோட்டச் செயற்பொறியாளர் முருகேசன் ஆகியோரும் உடனிருந்தனர்.