பொன்னமராவதியில் காவல்துறை சார்பில், தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் நூதன விழிப்புணர்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி பேருந்துநிலையம் எதிரே நடைபெற்ற நிகழ்விற்கு காவல் துணை கண்காணிப்பாளர் கே.கே.செந்தில்குமார் தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர் கருணாகரன் முன்னிலை வகித்தார்.
நிகழ்வில் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் நூதனமான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. எமதர்மன் வேடமிட்ட ஒருவர், இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து வருபவர்களை இனிப்பு வழங்கி வரவேற்றார். தலைக்கவசம் அணியாமல் வந்தால் எமதர்மன் பாசக்கயிறு வீசி அவர்களை பிடிப்பது போன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உதவி ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் பங்கேற்றனர்.