புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாற்றில் சட்டவிரோத மணல் குவாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த வழக்குரைஞர் முருகானந்தம் தாக்கல் செய்த மனு:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் ஆளப்பிறந்தான் கிராமத்தில் தெற்கு வெள்ளாற்றில் சிலர் இரவு பகலாக மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கிருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுகிறது. மணல் கடத்தல் காரணமாக தெற்கு வெள்ளாற்றில் ஆங்காங்கே பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மணல் திருட்டு தொடர்ந்தால் இப் பகுதி விவசாய நிலங்கள் தரிசாகிவிடும். குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும். மணல் கடத்தல் குறித்து காவல் துறையிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே, மணல் கடத்தலைத் தடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் எம்.சத்தியநாரயணன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. சட்டவிரோத மணல் குவாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.