பொன்னமராவதி: பொன்னமராவதி வட்டார விவசாயிகள் வேளாண்மைத் துறையின் மூலம் மானியத்தில் வழங்கப்படும் சொட்டு நீர், தெளிப்பு நீர் கருவிகள் பெற்று பயன்பெறலாம் என்று வேளாண்மை உதவி இயக்குனர் சா.சிவராணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பிரதம மந்திரியின் நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசன கருவிகள் 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் வழங்கப்பட்டு வருகிறது. பொன்னமராவதி வட்டாரத்தில் 2018ம் ஆண்டு பெய்த மழை அளவு 64415 மி.மீ ஆகும். இதனால் இவ்வட்டாரத்தில் உள்ள அனைத்து கண்மாய்களும் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. மேலும் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் குறைந்து காணப்படுகிறது.
குறைவான நீரினை பயன்படுத்தி நீர் தேவை குறைவாக தேவைப்படும் பயிர்களான உளுந்து, நிலக்கடலை ஆகிய பயிர்களை பயிர் சாகுபடி செய்ய வேண்டும்.
நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களை தேர்வு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், சிட்டா, அடங்கல், நில புல வரைபடம், சிறு, குறு விவசாயிக்கான சான்று, புகைப்படம், மண் மற்றும் நீர் பரிசோதனை அட்டையுடன் பொன்னமராவதி வேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.