கந்தர்வகோட்டையில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை வழங்கக் கோரி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
போராட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் பி.மணி தலைமை வகித்தார். கந்தர்வகோட்டை வெள்ளமுனியன் கோயில் திடலில் இருந்து ஊர்வலமாக வந்த தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தேசிய ஊரக வேலை உறுதி திட்ட உறுப்பினர் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டும், மாவட்டத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போர்க்கால அடிப்படையில் சீர்ப்படுத்தி, நாள்தோறும் குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்கி முழக்கங்களை எழுப்பினர்.
அறந்தாங்கியில்...: அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள சுனையக்காடு ஊராட்சி, ஆண்டவராயர்சமுத்திரம், தாந்தாணி ஊராட்சி, எரிச்சி, ஆமாஞ்சி, மேற்பனைக்காடு, கொடிவயல், விக்னேஷ்வரபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 100 நாள் வேலை வழங்கக் கோரி, விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றிய தலைவர் ஆ.செல்லமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமாவதியை சந்தித்து மனு அளித்தனர்.