புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காட்டில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையை மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காட்டில் இயங்கி வந்த இரண்டு டாஸ்மாக் மதுக்கடைகளும் அப்பகுதி மக்களின் எதிர்ப்பால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டன. இந்நிலையில், மேற்பனைக்காட்டில் மீண்டும் டாஸ்மாக் மதுக்கடை திறப்பதற்கு முயற்சி நடைபெறுவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், ""மேற்பனைக்காட்டில் இயங்கிவந்த மதுக்கடைகளால் பெண்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பெரும் அச்சுறுத்தல் இருந்தது. பின்னர் மக்களின் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்ட அந்த மதுக்கடைகளை மீண்டும் திறக்க அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்'' என்றனர்.