புதுக்கோட்டை அருகே மதுபோதையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் தள்ளிவிடப்பட்டவர், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
புதுக்கோட்டை அடப்பன்வயல் 3ஆம் வீதியைச் சேர்ந்தவர் சன்னாசி மகன் கார்த்திக் (24). இவரது நண்பர்கள் அதே பகுதியைச் சேர்ந்த பீர்முகம்மது, சம்புராஜ் ஆகியோருடன் கடந்த பிப். 28ஆம் தேதி மது அருந்தியுள்ளார். அப்போது மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பீர்முகம்மதுவும், சம்புராஜுவும் கார்த்திக்கை அந்தப் பகுதியிலிருந்த சாக்கடையில் தள்ளிவிட்டதாகத் தெரிகிறது.
பலத்த காயமடைந்த கார்த்திக் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார். இதையடுத்து பீர்முகம்மது, சம்புராஜ் ஆகிய இருவரையும் கைது செய்த திருக்கோகர்ணம் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.