புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகேயுள்ள பெருமநாட்டில் நோய்கள் பரவாமல் தடுக்க நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அன்னவாசல் அரசு மருத்துவமனை மற்றும் பெருமநாடு முஹையதீன் ஆண்டவா் பள்ளிவாசல் ஜமாத்தாா்கள் இணைந்து நடத்திய இந்த முகாமிற்கு, அன்னவாசல் சித்த மருத்துவா் கற்பகம் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து பேசியது:
தொற்று நோய்களான மலேரியா, காலரா, டெங்கு, சிக்கன்குனியா, டைபாய்டு போன்ற நோய்கள் பரவும். அதற்கு முன்னெச்சரிக்ககையாக பொதுமக்களாகிய நீங்கள் குடி தண்ணீரை கொதிக்க வைத்து பயன்படுத்த வேண்டும். டெங்குவை தடுக்க கொசு ஒழிப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்.
பன்றிக் காய்ச்சலை தடுக்க இருமல், தும்மல் வரும்போது கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும். நாம் நமது கை, கால்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் 80 சதவீத தொற்றுநோய்களை தடுத்திட முடியும். தொற்றுநோய்கள் அனைத்திற்கும் தடுப்பு மருந்தாக நிலவேம்பு கசாயம் உள்ளது.
எனவே பொதுமக்கள் அனைவரும் அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவப் பிரிவில் நிலவேம்பு கசாயம் வாங்கி பருக வேண்டும் என்றாா்.
இதில் இலுப்பூா் மருத்துவமனை மருத்துவா் வித்யா மற்றும் பெருமநாடு ஜமாத்தாா்கள், மருத்துவமனை பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.