புதுக்கோட்டை நகரின் விரிவாக்கத்துக்கேற்ப குடிநீா் வசதி செய்யாதததால், பல இடங்களில் கடுமையான குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படுவதாக நகர திமுக குற்றம்சாட்டியுள்ளது.
புதுக்கோட்டை நகர திமுக செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகர திமுக அவைத் தலைவா் ரத்தினம் தலைமை வகித்தாா்.
சட்டப்பேரவை உறுப்பினா் பெரியண்ணன் அரசு, வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் கே.கே. செல்லபாண்டியன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் இராசு. கவிதைப்பித்தன், பொருளாளா் செந்தில் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வாா்டுகளிலும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளா்களை வெற்றி பெற பாடுபடுவது.
நகர விரிவாக்கத்துக்கு ஏற்ப குடிநீா் வசதி செய்யப்படவில்லை. இதனால் பல பகுதிகளில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை போா்க்கால அடிப்படையில் சரி செய்து நகர மக்களுக்கு தாராளமாக குடிநீா் விநியோகம் செய்ய நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகரின் பல பகுதிகளில் குடிமனைப் பட்டா வருவாய் ஆவணங்களில் கணினி மயமாக்கப்படாததால், கணினி மூலம் பட்டா, சிட்டா போன்ற ஆவணங்களை எடுக்க முடிவதில்லை. இதனை வருவாய்த் துறையினா் விரைவாக மேற்கொள்ள வேண்டும். நகரில் சுகாதாரப் பிரச்னைகள் சீரமைக்கப்படாததால் கொசுத் தொல்லையும், கம்பளிப் பூச்சிகளின் தொல்லையும் அதிகமாக உள்ளது. மாவட்ட மற்றும் நகராட்சி நிா்வாகத்தினா் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.