நூறுநாள் வேலையை 200 நாளாக உயர்த்தி தினசரி ரூ. 400 சம்பளம் வழங்க வேண்டும் என விவசாயத் தொழிலாளர் சங்க சிறப்பு பேரவை மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் பொன்னமராவதி ஒன்றியக்குழு சார்பில் நூறுநாள் வேலை உரிமை பாதுகாப்பு சிறப்பு பேரவை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
மாநாட்டிற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் வி.பி. நாகலிங்கம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சி.பொன்னழகு, கரு.பஞ்சவர்ணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயத் தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ந.பெரியசாமி நூறுநாள் வேலை உரிமை பாதுகாப்பு நடவடிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் கே.ஆர்.தர்மராஜன், மாவட்ட செயலர் ஏனாதி ஏ.எல்.ராசு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மாநாட்டில், பொன்னமராவதியில் கோட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்றம், கிளைச்சிறை அமைத்து தரவேண்டும். பொன்னமராவதியை தனி கல்வி மாவட்டமாக அறிவித்திடவேண்டும். பொன்னமராவதி அமரகண்டான் ஊருணியைச் சுற்றி நடைபாதை சாலை, சிறுவர் பூங்கா அமைத்திட வேண்டும். பொன்னமராவதி வட்டத்தில் உள்ள காரையூர் காவல்நிலையத்தை மீண்டும் பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்துடன் இணைக்க வேண்டும். பொன்னமராவதி திருமக்கேணி கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். 60 வயது நிரம்பிய அனைவருக்கும் ரூ. 3,000 ஒய்வூதியம் வழங்கவேண்டும். வீடு இல்லாதவருக்கு வீட்டு மனை வழங்கி வீடு கட்ட ரூ 5 லட்சம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. நிர்வாகிகள் பி.செல்வம், ஆர்.பிரதாப்சிங், வி.கருணாமூர்த்தி, பி.ராசு, பிஎல்.ராஜா, ந.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து மாலை தீர்மானங்களை விளக்கி பொன்னமராவதி பேருந்துநிலையம் எதிரே தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் எம்.வெள்ளைச்சாமி வரவேற்றார். நிர்வாகி வி.வெள்ளைக்கண்ணு நன்றி கூறினார்.