விராலிமலை வட்டம், ஆவூர் அருகே மலையேறி கிராமத்தில் உள்ள பிடாரியம்மன் கோயில் மற்றும் விநாயகர், அய்யனார், கருப்பர், சப்பானி, காளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கான குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை காவிரியில் இருந்து கோயிலுக்கு புனித நீர் எடுத்துவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சனிக்கிழமை மாலையில் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த யாகசாலை கூடத்தில் கணபதி ஹோமம் மற்றும் முதலாம் கால யாகசாலை பூஜையும், தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது. இதையடுத்து இரண்டாம் யாகசாலை பூஜை நடந்தது.
பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் யாகசாலை கூடத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் குடங்களை, சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தவாறு மேளதாளம் முழங்க கோயிலை சுற்றி ஊர்வலமாக வந்து கோபுரத்திற்கு எடுத்து சென்றனர். தொடர்ந்து வேதமந்திரம் முழங்க பிடாரியம்மன், காளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றி குடமுழுக்கு செய்தனர். விழாவில் மலையேறி, ஆவூர், மதயானைப்பட்டி, ஆம்பூர்பட்டி, சாமிஊரணிப்பட்டி, மேலப்பட்டி, புதுப்பட்டி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.