சென்னையில் அண்மையில் நடைபெற்ற 34 ஆவது மாநிலத் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தடகள வீரர்களை மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி புதன்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினார்.
சென்னை நேரு விளையாட்டரங்கில் 34 ஆவது மாநில இளையோர் தடகளப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இந்தப் போட்டியில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ரோஷிணி 600 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடத்தையும், செந்தமிழ் 1,500 மீட்டர் ஓட்டத்தில் 3 ஆம் இடத்தையும், கிருத்திகா 800 மீட்டர் ஓட்டத்தில் 3 ஆம் இடத்தையும், நந்தகுமார் 800 மீட்டர் ஓட்டத்தில் 2 ஆம் இடத்தையும் பெற்றனர்.
இவர்களில் ரோஷினியும், நந்தகுமாரும் கர்நாடக மாநிலம் உடுப்பியில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள 31ஆவது தென் மண்டலங்களுக்கு இடையிலான மற்றும் அகில இந்திய தடகளப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். வெற்றி பெற்றவர்களை மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி புதன்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினார். அப்போது, புதுக்கோட்டை மாவட்ட தடகளச் சங்கத் தலைவர் டாக்டர் சலீம், மாவட்டப் பயிற்சியாளர் செந்தில்கணேஷ் ஆகியோரும் உடனிருந்தனர்.