ஆவணி மாதக் கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி, புதுக்கோட்டைகோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திருவப்பூர் அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயிலில் பக்தர்கள் அதிகாலையிலிருந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். முத்து மாரியம்மனுக்கு காலையில் பால், பன்னீர், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் நீர் உள்ளிட்டவற்றில் அபிஷேகம் நடைபெற்றது.மாலையில் சந்தனக் காப்பு மலர் அலங்காரத்தில் முத்து மாரியம்மன் காட்சியளித்தார் . இதுபோல புதுக்கோட்டை வடக்கு 3-ஆம் வீதியிலுள்ள மகிமை நாயகி முத்து மாரியம்மன் கோயில், பூங்கா நகரிலுள்ள முத்துமாரியம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
கீழ 4-ஆம் வீதி (வடக்கு) முத்து மாரியம்மன் திருக்கோயில் அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கீழ 4 -ஆம் வீதி (தெற்கு) முத்து மாரியம்மன் திருக்கோயிலில் முத்துமாரியம்மன் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.